Thursday, January 31, 2013

உன்னை யாம் தலைமைக்கு உயர்த்தியதால் - கமல்ஹாசன்


உன்னை யாம் தலைமைக்கு உயர்த்தியதால்
நீ எம்மிற் சிறந்தவன் எனப் பொருள் கொள்ளாதே
அப்பொருளை ஏற்கும் பணிவு எமக்கில்லை என உணர்.

எம் மொழி எம் நிறம் என்ற விசாலமற்ற அன்பு காரணமாக,
எவ்வழி எனத் தெரியாமலே 
எமை நடத்திச் செல்லப் பணித்தோம் உன்னை.

இக்கடிவாளங்களும், சேணங்களும், எமக்குப் பொருந்தச் செய்யப்பட்டவை அல்ல.
அவை எமது நாட்டுத் தயாரிப்பல்ல. எமது அளவல்ல. 
வேறுமட்டக் குதிரைகளின் அளவு. எமது வாய் சிறிது

இவ்வமைப்பில், யாம் எக்கணம் நினைப்பினும் தலையை உருவிக் கொண்டோடுவோம்
பிழையாகப் பூட்டப்பட்ட எமது கடிவாளத்தில் இருந்து மீண்டு.
வலது வார்பட்டையை இழுத்தால் இன்று இடதுபுறம் திரும்புவோம்

ஓர் சிலிர்ப்பில் அகலும் கண்மறைப்பான்கள்.
அப்போது தென்படுமே
வெவ்வேறு பாதைகள்!
அவற்றில், எவற்றிற்கு யாம் பாதசாரிகள்?
எமக்கும் தெரியாது உனக்கும் தெரியாது.

நீ அமர்ந்திருக்கும் பீடத்தின் அசௌகரியம், விபத்தல்ல.
யாமதை அமைத்ததே அப்படி.
நீ உறங்கிவிடாதிருக்க, ஓரிடம் அமர்ந்து விடாதிருக்க,

யாம் வடித்த பீடமது.
உன்னை அதில் ஏற்றுவதில் யாம் காட்டிய ஆர்வத்தை மிகும், உன்னை வீழ்த்துவதில் யாம் காட்டப்போவது.

தனித்திருத்தல் விழித்திருத்தல், ஒரு புறமிருக்கட்டும்.
எம்மைப் போல் பசித்தும் இருக்கக் கல்.

நாயகம் எமதா? உனதா?என்ற சந்தேகத்திற்கிடமின்றி,
இது எமது நாயகம்.

இடது வாரை இழுத்துப்பார், வலது புறம் திருப்புவோம்;
இந்த அமைப்பும், எமக்கும் உனக்கும், சாஸ்வதமில்லை;
மாறும், ஏதேனும் ஒரு விபத்தின் மூலம்.

- கமல்ஹாசன்

No comments:

Post a Comment