Wednesday, March 6, 2013

எப்போதும் - கல்பற்றா நாராயணன், மலையாளத்தில் இருந்து தமிழாக்கம்: ஜெயமோகன்

எவரும்
எப்போதும்
அவர்களேயல்ல.

குறிவைக்கும்
ஒற்றைக்கண்ணன்
ஊனமுற்றவனல்ல.

உறங்கும்போதும்
எண்ணும்போதும்
விழியிழந்தவன்
விழியிழந்தவனல்ல.

திருடன்
தன்வீட்டில் திருடனல்ல.

யாரறிவார்
உண்மையில் இப்போது இருப்பதை விட
பெரிய உலகில் இருந்துகொண்டிருக்கலாம் நாம்.

யாரறிவார்
உண்மையில் இப்போது இருப்பதை விட
சிறிய உலகில் இருந்துகொண்டிருக்கலாம் நாம்.

- கல்பற்றா நாராயணன், மலையாளத்தில் இருந்து தமிழாக்கம்: ஜெயமோகன்

குடை - கல்பற்றா நாராயணன், மலையாளத்தில் இருந்து தமிழாக்கம்: ஜெயமோகன்

எதிர்பாராமல் பெய்தஒரு பெருமழையில்
அப்போது மட்டுமே மனிதர் கண்ணில் படக்கூடிய
அப்போது மட்டுமே உசிதமென்று தோன்றக்கூடிய
கடற்கரைப் பாதையோரத்து ஓலைக்கூரைக்குக் கீழே
சேர்ந்து நிற்கையில் அறிமுகம் கொண்டோம்

கனத்து பெய்யும் மழையில்
அதிபுராதனமான ஓர் அபயத்தின் நம்பிக்கையில்
எங்களுக்கு எங்களைப் பிடித்துப் போயிற்று.
சேர்ந்து வாழ முடிவெடுத்தோம்.
ஒரே போலத் தோன்றும் இருகுழந்தைகளுக்கு
பெற்றோரானோம்.

சமீபத்தில் ஓர் இரவில்
தூங்கிவிட்டாள் என்று தோன்றியபோது
அவளது கரத்தை எடுத்து மெல்ல கீழே வைத்தேன்
அவள் கேட்டாள்
அந்த மழை அரைமணிநேரம் மட்டுமே பெய்ததா என்ன?

- கல்பற்றா நாராயணன், மலையாளத்தில் இருந்து தமிழாக்கம்: ஜெயமோகன்

Thursday, January 31, 2013

உன்னை யாம் தலைமைக்கு உயர்த்தியதால் - கமல்ஹாசன்


உன்னை யாம் தலைமைக்கு உயர்த்தியதால்
நீ எம்மிற் சிறந்தவன் எனப் பொருள் கொள்ளாதே
அப்பொருளை ஏற்கும் பணிவு எமக்கில்லை என உணர்.

எம் மொழி எம் நிறம் என்ற விசாலமற்ற அன்பு காரணமாக,
எவ்வழி எனத் தெரியாமலே 
எமை நடத்திச் செல்லப் பணித்தோம் உன்னை.

இக்கடிவாளங்களும், சேணங்களும், எமக்குப் பொருந்தச் செய்யப்பட்டவை அல்ல.
அவை எமது நாட்டுத் தயாரிப்பல்ல. எமது அளவல்ல. 
வேறுமட்டக் குதிரைகளின் அளவு. எமது வாய் சிறிது

இவ்வமைப்பில், யாம் எக்கணம் நினைப்பினும் தலையை உருவிக் கொண்டோடுவோம்
பிழையாகப் பூட்டப்பட்ட எமது கடிவாளத்தில் இருந்து மீண்டு.
வலது வார்பட்டையை இழுத்தால் இன்று இடதுபுறம் திரும்புவோம்

ஓர் சிலிர்ப்பில் அகலும் கண்மறைப்பான்கள்.
அப்போது தென்படுமே
வெவ்வேறு பாதைகள்!
அவற்றில், எவற்றிற்கு யாம் பாதசாரிகள்?
எமக்கும் தெரியாது உனக்கும் தெரியாது.

நீ அமர்ந்திருக்கும் பீடத்தின் அசௌகரியம், விபத்தல்ல.
யாமதை அமைத்ததே அப்படி.
நீ உறங்கிவிடாதிருக்க, ஓரிடம் அமர்ந்து விடாதிருக்க,

யாம் வடித்த பீடமது.
உன்னை அதில் ஏற்றுவதில் யாம் காட்டிய ஆர்வத்தை மிகும், உன்னை வீழ்த்துவதில் யாம் காட்டப்போவது.

தனித்திருத்தல் விழித்திருத்தல், ஒரு புறமிருக்கட்டும்.
எம்மைப் போல் பசித்தும் இருக்கக் கல்.

நாயகம் எமதா? உனதா?என்ற சந்தேகத்திற்கிடமின்றி,
இது எமது நாயகம்.

இடது வாரை இழுத்துப்பார், வலது புறம் திருப்புவோம்;
இந்த அமைப்பும், எமக்கும் உனக்கும், சாஸ்வதமில்லை;
மாறும், ஏதேனும் ஒரு விபத்தின் மூலம்.

- கமல்ஹாசன்

Monday, October 8, 2012

வீழும் கணம் - மனுஷ்ய புத்திரன்

வீழும் கணம் - மனுஷ்ய புத்திரன்

பந்தயத்தின்  சவால்களுக்கு
பயப்படவே இல்லை

எதிர்கொண்டு நிற்பதற்கான சக்தியில்
ஒரு குறை இல்லை

இலக்கை அடைய
இன்னும் ஓரடி போதும்
என்றும் அவனுக்குத் தெரியும்

யார் யாரிடமெல்லாம் போய்
போட்டியிட வேண்டியிருக்கிறது
என்று ஒரு கணம் நினைத்தான்
ஆயுதங்களோடு
அப்படியே மனம் முறிந்து வீழ்கிறான்

- மனுஷ்ய புத்திரன்

Friday, September 21, 2012

ஒரு சுருக்கமான சுயசரிதை - மனுஷ்ய புத்திரன்

கொஞ்சப் பேருக்கு
என்னைப் பிடிக்கும்

கொஞ்சப் பேருக்கு
என்னைப் பிடிக்காது

நிறையப்பேருக்கு
என்னைப் பற்றி
அபிப்ராயமே இல்லை

நான்
என் வாழ்க்கையைப்
பணயம் வைக்கிறேன்
அவர்களை
என்னைப்
பிடித்தவர்களாகவோ
பிடிக்காதவர்களாகவோ
ஆக்குவதற்கு

- மனுஷ்ய புத்திரன்