நான் சூர்பனகை
ராவணசோதரி.
பெயரைக் கேட்டமாத்திரத்தில்
உங்கள் மனதில் தோன்றுகிறதா
ஊன்பசிகொண்ட கண்களும்
நகமும் பல்லும்
பூமி குலுங்கும் நடையும்
காட்டைப்பிளந்த வெளிப்படலும்.
அதிலெனக்கு வருத்தமில்லை.
நாங்கள் காமரூபிகள்.
தூரம்
என்னை பறவையாக்கும்
அப்பாலுள்ள
மலைகளின் பழங்கள்
என்னை வானரமாக்கும்
தளிர்கள்
என்னை மானாக்கும்
நீர்
என்னை மீனாக்கும்
ஆசையின் ரூபம் நான்.
பயமில்லை
மறையில்லை
சொல்லும் பொருளும்
வெவ்வேறில்லை எனக்கு.
வாழ்வின் மாயாஜாலம்
அதை நான்
இன்னும் இழக்கவில்லை
ரதி
பூரணமாய் ஆட்கொள்கையில்
தேவ-அசுர-வானர-மானுட பேதமற்று
எந்த பெண்ணிற்கும்
எனது இயல்பு
எனது சர்பவீர்யம்.
சிலர் சீறுவர்
சிலர் தீண்டுவர்
நெஞ்சு வெடித்து அழுவர் சிலர்
சிலர் கிடந்தமாத்திரத்தில்
மலைகளை கொரிப்பர்.
அவர்கள் ஏங்கித்தவிக்கும்
பள்ளத்தாக்கில்
சுதந்திரமாய்
நடந்து திரிபவள் நான்.
கைநீட்டினால் எட்டாத ஏதுமில்லை
ராவனசோதரிக்கு
கொண்டாட்டமே வாழ்வு
“ராமனே வாழ்வின் ஒளி” என
கவி சொன்ன வார்த்தையை
அவனை நேரில் கண்டபோது
நானும் உணர்ந்தேன்.
ஆனால்,
ராமன் வாழ்வைப் பயந்தவன்
அவன் எனக்கு
தம்பியை கைகாட்டினான்
அவனும் அச்சத்தால் பீடிக்கப்பட்டிருந்தான்.
கோழைகள்
எதிரிகளைவிட நீசர்கள்
அவர்கள் என்னை
வதைத்து ரசித்தனர்
கோழைத்தனமும் குரூரமும்
இரண்டல்ல என
நான் உணர்ந்தேன்
முழுமையடையாத காமத்தினால்
உடைந்து அழுத இணைப்பறவையை
அறியமுடிந்த மகாகவிக்கு
என்னை புரியாமல் போனது ஆச்சரியம்.
அல்லது புரிந்ததனால் தந்த
மஹாரிஷியின் சாபம்தான்
ராமன் பின்னர்
அனுபவித்ததெல்லாமுமா?
வென்றதெல்லாம் தோல்விகள்!
இசைபவள் அல்ல சீதையென
அறிந்த ராவணன்
அவளுக்கு
ஒரு வருடத்தை நீட்டிக்கொடுத்தான்
“நீ காமரூபினி ஆகும்வரை
நான் உன்னை தொடமாட்டேன்” என
என் சகோதரன் பக்கத்தில்
சீதை பாதுகாப்பானவள்
ராமன் பக்கத்தில்
நானோ?
காமரூபினியானதினாலேயே
இன்னும்
ஏற்கப்படவேண்டியவள்
பலவீனமானவள்
தயைக்கு உரியவள்
காக்கப்பட வேண்டியவள்
அவளது
மூக்கையும் முலையையும்
அரிந்தது
ராமநீதி.
உணவை யாசிப்பவளைவிட
பரிதாபத்திற்குறியவளல்லவா
காமத்தை யாசிப்பவள் ?
அவளை
ஏளனம்செய்யலாமா?
அவளை
துன்புறுத்தலாமா?
நிபந்தனையற்ற ஆனந்தமெனில்
அச்சம்தான் இல்லையா
உங்களுக்கு.
மனிதர் யாவரும்
நிறைவறியாதோர்!
பொறாமையல்ல
பரிதாபம்தான் எனக்கு
சீதையிடம்.
மண்ணில் பிறந்து
என்னவாகப்போகிறோமென
அறியாத கனவனின் நிழலாய்
தலைதாழ்த்தி நடந்து
கல்லிலும் முள்ளிலும்
இளமையெல்லாம் அலைந்து
கனவனின் சகோதரனே
தன்மேல் ஆசைகொண்டானென
ஆசைக்கொள்ள மட்டுமேயான
சிறிய உலகில்
ஒரு வாழ்வு.
கர்ப்பிணியான போதும்
அனாதையாக
கனவன் ஆண்ட தேசமே
புறந்தள்ள
கொண்டாட்டங்கள்
முன்னேறிச்செல்வதைக் கண்டுதானே
காட்டில் கழிந்தாள்.
காரணமற்ற காத்திருப்பின்
வாழ்நாள் உரிமையாளர்தான்
மனிதகுலப் பெண்கள்
சீதை தன்
வாழ்நாளெல்லாம் காத்திருந்தாள்.
தெரியுமா,
ராவணராம யுத்தம் நடந்தது
சூர்ப்பனகைக்கு வேண்டித்தான்
சிதைக்காக அல்ல.
சீதையை அபகரித்தது
ஒரு போர்தந்திரம் மாத்திரமே
அது ஒரு துவக்கம் அவ்வளவே.
எனக்காக என் வம்சம்
இல்லமலாகும் வரை போரிட்டனர்
கடைசி ஆள் வரை
எனக்காக
ரத்தம் சொரிந்தனர்
ஒருவன் கூட
என்னப் பழிக்கவில்லை.
ஆம்
ஆசை
ஒரு குற்றமல்ல.