Friday, September 23, 2011

'நான் கொன்ற பெண்' - - பிரகாஷ்ராஜ், சொல்லாததும் உண்மை தொடரில்

'நான் கொன்ற பெண்' என்று ஒரு கதை. ஆனந்தா என்கிற கன்னட எழுத்தாளர் எழுதினது. என் நம்பிக்கைகளை மாத்தின கதை அது.

கோயில்களைத் தேடித் தேடிப் போய் ஆராய்ச்சி செய்யற ஒருத்தன் ஊர் ஊரா போயிட்டிருக்கும்போது, வரலாற்றுச் சிறப்பு மிக்க ஒரு கோயிலைப் பத்திக் கேள்விப்பட்டு, அதைப் பார்க்க அழகான ஒரு கிராமத்துக்குப் போறான்.

நல்ல அழகன். திறமைசாலி. அவனை அந்த ஊர்ப் பெரியவர் ரொம்ப மரியாதையோடு வரவேற்கிறார். கூடவே இருந்து சுத்திக் காட்டி, ஆதாரங்கள் சொல்லி உதவி செய்யறார். ராத்திரி அந்த ஊரிலேயே தங்க வேண்டிய நிலைமை.ஊர்ப் பெரியவர் அவனைத் தன் வீட்ல தங்கிக்கச் சொல்றார்.

அங்கே ஒரு பேரழகியை, துளசி மாடத்துல அவ விளக்கு ஏத்தும் போது பார்த்துடறான். ஒரு புது ஆம்பளையை வீட்டுக்குள்ள பார்த்ததும், பதறி உள்ளே ஓடிடுரா அவ. அப்ப 'ஜல் ஜல்'கொலுசுச் சத்தம் அவன் காதுக்குள்ளே நிக்குது. தன்னை மறந்து ரசிக்கிறான். 'அந்தப் பெண்ணு யாரு? கல்யாணம் ஆகிடுச்சா?'னு அந்த வீட்டு வேலைக்காரன் கிட்ட விசாரிக்கிறான். அதை அவளோட அப்பா பார்த்துடறார். இது தெரிஞ்சு ரொம்ப தர்ம சங்கடத்தோட படுக்கப் போயிடறான் அவன்.

ராத்திரி கதவு தட்டுற சத்தம் கேட்டுத் திறக்கிறான். புதுப் புடவையில் தேவதை மாதிரி வந்து நிக்கிறா அந்த பொண்ணு.கையில் பால் சொம்பு. முதலிரவுக்கு வர்றவ மாதிரி உள்ளே வந்து கதவைத் தாழ் போட்டுட்டுக் கட்டில்ல உட்கார்றா. ஸ்தம்பிச்சு நிக்கிறான் அவன். 'நீங்க என்னைப் பார்த்து ஆசைப்பட்டீங்களாமே? அதான் அப்பா அனுப்பி வெச்சார்'னு சொல்றா. அதிர்ந்து போறான் அவன். பெத்த பொண்னையே யாரோ ஒருத்தனோட படுக்க அனுப்பியிருக்கானே அப்பன், இவளும் பொண்டாட்டி மாதிரி வந்து கட்டில்ல உட்கார்றாளேன்னு கோவத்துல கத்துறான்.

அதுக்கு அவ, 'நான் தேவதாசி. வரிசையா பெண் குழந்தைகளே பிறந்ததால, அப்பா கடவுள்கிட்ட பிரார்த்தனை பண்ணினாரு. அடுத்து தனக்கு ஆண் குழந்தை பிறந்தா என்னைக் கோயிலுக்கு நேர்ந்து விட்டு தேவதாசி ஆக்குறதா வேண்டிக்கிட்டாரு. பிரார்த்தனை பலிச்சு ஆண் வாரிசு வந்ததால் நான் தேவதாசி ஆகிட்டேன். யாராவது என் மேல ஆசைப்பட்டா அதைத் தீர்த்து வைக்கிறது என்னோட கடமை'னு நிதானமா பேசுறா. அவளோட மூடநம்பிக்கையைத் தன் வார்த்தைகளால் தகர்த்து எரியறான் ஆராய்ச்சியாளன். இப்படி ஒரு பிழைப்பு தேவையான்னு அவன் சொன்ன நியாயங்கள் அவ மனசுல ஆழமா பதியுது.

மறுநாள் காலையில் பார்த்தா, குற்ற உணர்ச்சியால அந்தப் பொண்ணு தூக்கு மாட்டிச் செத்திருப்பா. அவளோட மூட நம்பிக்கையை உடைக்கத் தெரிந்தவனுக்கு, அதுக்குப் பதிலா அவளுக்கு வாழ்க்கை மீது வேற நம்பிக்கை தர முடியல. அல்லது, தரத் தெரியல. தன்னோட தவறை நினைச்சு வருந்தி, அவளைத் தானே கொன்னுட்டதா புலம்ப ஆரம்பிக்கிறான் அவன்.

என் நம்பிக்கைகளை நான் எப்பவும் பிரசாரம் பண்ண விரும்பாததுக்கு இந்தக் கதைதான் காரணம். இன்னொரு வலுவான நம்பிக்கையைத் தர முடியும்ங்கிற உறுதி இருந்தால்தான் மத்தவங்க நம்பிக்கை மேல் கை வைக்கணும். இல்லேன்னா அவங்கவங்களும் தங்களோட நம்பிக்கையோட வாழ்ந்த்துட்டுப் போகட்டும். அதனால லாபம் இல்லாம இருகலாம். நிச்சயமா நஷ்டம் இருக்காது.

- பிரகாஷ்ராஜ், சொல்லாததும் உண்மை தொடரில்.

No comments:

Post a Comment